ஒடிசா மாநிலத்தின் ஆன்மிக நகரமான புரியில், ஆக்கிரமிப்பு அகற்றும் சோதனையின் போது ஏழை நடைபாதை வியாபாரி ஒருவரின் கடை கலைக்கப்பட்டதை நோட்டமிட்ட பொதுமக்கள், அங்கிருந்த ‘காஜா’ (Khaja) இனிப்புகளைப் போட்டிப் போட்டுக் கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதிகாரிகள் சாலையோரக் கடைகளை அகற்றிய போது, அந்த ஏழை வியாபாரி இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கூட்டத்தினர், சிதறிக்கிடந்த இனிப்புகளைக் கைகளில் அள்ளியும், பிளாஸ்டிக் கவர்களில் அள்ளிப் போட்டும் திருடிச் சென்றுள்ளனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் சிரித்துப் பேசிக் கொண்டே அந்த ஏழையின் உழைப்பைச் சூறையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ​

புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் அருகே நடந்த இந்த வெட்கக்கேடான சம்பவத்தைப் பார்த்த சோஷியல் மீடியா வாசகர்கள், அந்தப் பேராசை பிடித்த கூட்டத்தை ‘மானங்கெட்ட கூட்டம்’ என்று மிகக் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர். “லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு புனிதமான ஆன்மிக பூமியில், ஒரு ஏழையின் வியர்வையிலும் உழைப்பிலும் உருவான உணவைத் திருடித் தின்பதற்கு இவர்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?” என்று நெட்டிசன்கள் தங்களது குமுறல்களைக் கொட்டி வருகின்றனர்.

சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பற்ற நிலையைச் சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள், அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு சோதனையை விட, அங்கிருந்த மக்களின் மனிதாபிமானமற்ற, சுயநலமான குணம் தான் தங்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.