ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள RPMC தேர்வு மையத்தில் தேர்வுத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக வெளியான அதிர்ச்சித் தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வு வளாகத்திற்குள் நுழைந்து, அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு முறைகேட்டைக் கண்டித்து மாணவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை ஆக்ரோஷமாகத் தூக்கி வெளியில் வீசி எறியும் பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

​இந்தியாவில் தொடர்ந்து அரங்கேறி வரும் தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள், தங்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதாக மாணவர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். “இன்னொரு நாளும், இன்னொரு தேர்வுத்தாள் கசிவும்” என வேதனையோடு சமூக வலைதளங்களில் எக்ஸ் (X) பதிவுகள் மூலமாக நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் தேர்வு மையத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.