ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி  கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக முறையில் இது நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது. மக்களை ஏமாற்றி எதிர்க்கட்சிகளை முடக்கி விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாக தான் பார்க்க முடிகிறது. இந்த தொகுதியில் அரசு இயந்திரம் எதிர்க்கட்சியினருக்கு எத்தனை இடையூறுகளை செய்து எவ்வாறு ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது என்பது ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் காண முடிந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு இருக்கும் நிலைமையை பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்வதால் வெற்றியாக தான் பார்க்க முடிகிறது. திமுக தன்னுடைய 22 மாத கால ஆட்சியின் அவலங்களை மனதில் வைத்துக் கொண்டு நேரடியாக போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு கூட்டணி கட்சியை நிற்க வைத்து தப்பித்து விட்டது. நம் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இதனை எல்லாம் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்காமல் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கோடான கோடி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோல் திமுகவினர் செய்கின்ற தகுடித்தத்த வேலைகளை எல்லாம் நன்கு அறிந்த நான் பிரிந்து கிடக்கும். அனைவரும் ஒன்றாக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்று பட வேண்டும் என விரும்புகின்றார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கும். திமுக கூட்டணி படு மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். அதனால் தமிழக மக்களின் விருப்பத்திற்கு இணங்க ஒட்டுமொத்த கழக தொண்டர்கள் எதிர்பார்க்கும் ஒரு வலிமையான ஒருங்கிணைந்த அதிமுக அமைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை நமது இரு பெரும் தலைவர்களுக்கு சமர்ப்பிப்போம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு நாம் தலைவர்கள் கொடுத்த அதே பொற்கால ஆட்சியை விரைவில் அமைப்போம் என உறுதி அளித்துள்ளார். அதனால் தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள். அனைத்திற்கும் விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்படும் அதை கண்டிப்பாக நான் செய்து முடிப்பேன் என தெரிவித்துள்ளார்.