மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள கோகுல்பூரில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் தவளை கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் திங்களன்று (டிச. 2) வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான், இதே மாநிலத்தில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுத் தட்டுகளுக்குப் பதிலாக கழிவு காகிதத்தில் உணவு வழங்கப்பட்டதாகச் செய்தி வெளியான நிலையில், இந்த இரண்டாவது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரிமாறுவதற்குச் சற்று முன்பு உணவு வாளியைத் திறந்தபோது தவளை கண்டுபிடிக்கப்பட்டதால், மதிய உணவுக்குக் கூடியிருந்த பல குழந்தைகள் சாப்பிட மறுத்துவிட்டனர்.

“>

 

பள்ளி ஊழியர்களும் மாணவர்களும் மதிய உணவின் தரம் குறித்துப் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், உணவில் துர்நாற்றம், பூச்சிகள் மற்றும் மாசுபட்ட பொருட்கள் இருப்பதாகவும் புகார் கூறியுள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் குறித்து குவாலியர் கலெக்டர் ருச்சிகா சவுகான், மாவட்டப் பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி சோஜன் சிங் ராவத் ஆகியோர், குறைபாடுகளைக் கண்டறிந்து பொறுப்புக்கூறலைச் சரிசெய்ய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.