வடக்கு பெங்களூரு பகுதியில், ஆபத்தான நிலையில் நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் பாதையை மறித்து, ஒரு கும்பல் பைக்குகளில் ஆபத்தான முறையில் வீலிங் செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

அதோடு ஆம்புலன்ஸில் அவசர சைரன் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த போதிலும், அந்த பொறுப்பற்ற பைக் ஓட்டிகள் வழிவிடாமல் வாகனத்தின் முன் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவசர சிகிச்சைக்காகச் சென்று கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல முடியாமல் பெரும் தாமதத்திற்கு உள்ளானது.

“>

இந்த அநாகரீகமான மற்றும் சட்டவிரோதச் செயல் தொடர்பாக யஷ்வந்த்பூர் போக்குவரத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், ஆம்புலன்ஸை மறித்து ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கிய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டவுடன் அவர்கள் மீது அலட்சியமாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.