ஹரியானா மாநிலம் குருக்ராமின் அடர்ஷ் நகர் பகுதியில், காலையில் பள்ளிக்கூடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த ஸ்கார்ப்பியோ கார் மோதிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் அந்தச் சிறுமி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ கார் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கின்றன. சிறுமி மீது மோதியதோடு நிற்காமல், அந்த கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் மறைந்தது. ​இந்தக் கொடூர விபத்தில் அந்தச் சிறுமி சாலையில் தூக்கி வீசப்பட்டு, நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அதிவேகமாக கார் ஓட்டுதல் மற்றும் பிறர் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்த மர்ம டிரைவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு குறுகிய குடியிருப்புப் பகுதிக்குள் இப்படியொரு அதிவேகத்தில் காரை ஓட்டி வந்து ஒரு பிஞ்சு உயிரைச் சிதைத்த அந்த டிரைவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.