தெலங்கானா மாநிலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தார் கார் ஒன்று விவசாயக் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜகித்யாலா நகரைச் சேர்ந்த தாசரி அருண் என்ற அந்த இளைஞர், தனது நண்பர்களான அஷ்வின் மற்றும் நிவேஷ் ஆகியோருடன் ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு நள்ளிரவில் ஊர் திரும்பியுள்ளார்.

மொரபெல்லி – தாட்டிபல்லி என்ற குறுகிய சாலையில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த விவசாயக் கிணற்றுக்குள் தலைகீழாகப் பாய்ந்தது. விபத்துச் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாகக் கிணற்றுக்குள் இறங்கி காரின் கண்ணாடிகளை உடைத்து அஷ்வின் மற்றும் நிவேஷ் ஆகிய இருவரைப் பத்திரமாக மீட்டனர்.

“>

இருப்பினும், காரை ஓட்டிய அருண் சீட் பெல்ட் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கு இடையே சிக்கிக்கொண்டதால், உள்ளூர் மக்களால் அவரை வெளியே கொண்டு வர முடியாமல் காரினுள்ளேயே அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். விபத்தின்போது காரில் இருந்த இளைஞர்கள் தங்களது மொபைல் போனில் ஐபிஎல் இறுதிப் போட்டியைப் பார்த்துக்கொண்டே பயணித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த அருணின் தந்தை, தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், அவர் எப்போதும் கவனமாகவே வாகனத்தை ஓட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார். இந்தச் சோகமான விபத்து குறித்து ஜகித்யாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.