சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய முட்டை வண்டியை நடத்தி வந்த தோமர் சகோதரர்கள், தற்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் தோமர் மற்றும் அவரது சகோதரர் ரூபியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.35 லட்சத்திற்கும் அதிகமாகப் பணம், ரூ.66 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூபாய் எண்ணும் இயந்திரம், 125 கிராம் வெள்ளி, கைத்துப்பாக்கி, ரிவால்வர், கார்களில் Thar, BMW, Fortuner உள்ளிட்ட வாகனங்கள், மற்றும் சொத்து ஆவணங்கள் நிறைந்த பைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பான தகவல்கள் வருமான வரித்துறையிடம் பரிமாறப்பட்டுள்ளது. அவர்கள் இன்று 5 ஆயிரம் சதுர அடியில் ஆடம்பர பங்களாவில் வசிக்கின்றனர். தோமர் சகோதரர்கள் தொடக்கத்தில் முட்டை வண்டி வியாபாரியாக இருந்தாலும், பின்னர் அவர்கள் தொழில் மூலம் செல்வந்தர்களாக மாறினர்.

சிறு வியாபாரிகளுக்கு 10 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்து, பணம் செலுத்த முடியாதவர்கள் மீது அழுத்தம் கொடுத்து நிலங்களைப் பதிவு செய்து அபகரித்தனர். இதன் மூலம், பலரின் சொத்துகளை தங்களுடையதாக்கிக்கொண்டுள்ளனர்.

ஒரு காலத்தில் ஆட்டோவில் பயணித்த இவர்கள் இன்று பங்களா, சொகுசு கார்கள் என அரசர்களைப் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநில மக்களிடையே அதிர்ச்சியையும், போலீசார் நடவடிக்கையின் மீது பாராட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.