திரைப்பட நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் உடனடியாக எடுத்த மனிதநேய நடவடிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாகத் தனது எதார்த்தமான நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் முத்துக்காளை. இவரது மனைவிக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் முத்துக்காளை இன்று காலை வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், தனது மனைவியின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த குடும்பமும் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவச் செலவுகள் மற்றும் சிகிச்சைக்கான அவசரத் தேவையைக் குறிப்பிட்டு, தங்களுக்குத் தமிழக முதலமைச்சர் உடனடியாக உதவ வேண்டும் என்று கைகூப்பி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று நடிகர் முத்துக்காளை மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது மனைவியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை விபரங்களைக் கேட்டறிந்த அமைச்சர், முத்துக்காளையின் குடும்பத்தினருக்குத் தைரியம் கூறினார்.

 

மேலும், அரசின் சார்பில் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளும் முழுமையாகச் செய்யப்படும் என்று உறுதியளித்தார். திடீர் சோகத்தால் நிலைகுலைந்திருந்த முத்துக்காளைக்கு, அரசின் இந்த உடனடி தலையீடு மிகப்பெரிய நிம்மதியையும் ஆறுதலையும் தந்துள்ளது. மக்களை எப்போதும் சிரிக்க வைத்த ஒரு கலைஞர், தன் சொந்த வாழ்க்கையில் துயரத்தைச் சந்தித்து கண்ணீர் வடித்த சம்பவம் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதே வேளையில், முத்துக்காளையின் கோரிக்கைக்கு மின்னல் வேகத்தில் துரித நடவடிக்கை எடுத்த முதலமைச்சரின் செயலுக்குத் திரைத்துறையினரும், பொதுமக்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். முத்துக்காளையின் மனைவி விரைவில் குணமடைய வேண்டி இணையத்தில் பிரார்த்தனைகளும் குவிந்து வருகின்றன.