உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையின் நடுவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனது கணவரை, காதலியுடன் சேர்ந்து கையும் களவுமாகப் பிடித்த மனைவி, சாலையின் நடுவில் கடுமையாக மோதியுள்ளார். இந்த சம்பவம் கான்பூரின் நர்வால் மோட் பகுதியில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கணவர், வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்திருந்த அந்த மனைவி, திடீரென அவரை காதலியுடன் சேர்ந்து கண்டபோது, கோபம் கொண்டார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. சில நொடிகளில் அந்த வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது. ஒரு வழிப்போக்கர் இந்த சம்பவத்தை தனது மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

 

வீடியோவில், மனைவியும் காதலியும் சாலையின் நடுவில் ஒருவரை ஒருவர் தலைமுடியை இழுத்து, தள்ளி, அடித்துக் கொள்வதை காணலாம். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கணவர் இருவருக்கிடையிலான சண்டையில் தலையிட்டபோதும், நிலைமை மேலும் மோசமடைந்தது. ஒரு கட்டத்தில், கணவர் தனது மனைவியை அறைந்ததாகவும், பின்னர் காதலியும் மனைவியைத் தாக்கியதாகவும் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, சண்டையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். சிலர் நடுநிலை வகிக்க முயன்றபோதும், மனைவி ஆவேசமடைந்து கணவரையும் காதலியையும் தொடர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கான்பூர் போலீசார், சம்பவத்தின் வீடியோவைக் கைப்பற்றி விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் ஆரம்ப தகவலின்படி, சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.