பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகக் கூறி அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கடுமையாக அழுவதும், தன்னுடைய வீட்டிலேயே பாதுகாப்பாக இல்லையென கூறுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“2018 முதல் இது நடக்கிறது. இன்று மனஅழுத்தத்தில் காவல்துறைக்கு நான் நேரில் அழைத்தேன். என் வீட்டிலேயே நான் துன்புறுத்தப்படுகிறேன். தயவுசெய்து யாராவது உதவுங்கள்” என்று தனுஸ்ரீ கதறி கூறுகிறார்.
அத்துடன், “இந்த துன்புறுத்தலால் என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்காரியை வைத்துக்கொள்ள முடியாத நிலை. எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்ய வேண்டியுள்ளது. இதனால் மனச்சோர்வு அதிகரித்துள்ளது. என் வீடு பரிதாபமான நிலையில் உள்ளது” என தனுஸ்ரீ உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார். காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சரியானதும் காவல்நிலையம் செல்வதாகவும் கூறியுள்ளார்.
View this post on Instagram
“>
முன்னதாக 2018-ஆம் ஆண்டு, நடிகர் நானா படேகர் மீது பாலியல் தொல்லை புகார் செய்த தனுஸ்ரீ, “#MeToo” இயக்கத்தின் முக்கிய முகமாக விளங்கினார். அந்த வழக்கில் நீதிமன்றத்தில் அவரது புகாரை ஏற்க மறுத்ததாக சில செய்திகள் வெளியான நிலையில், தனுஸ்ரீ அதனை மறுத்து நீதிமன்றத்தின் உண்மையான ஆவணங்களையும் வெளியிட்டார்.
தற்போது மீண்டும் துன்புறுத்தப்படுகிறேன் என்ற புகாருடன் அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
