“தாய்” என்பதற்கான பொருள், உயிரினம் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியானது – பாதுகாப்பும், அன்பும், பரிவும். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி, இதை மேலும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. மரணத்தின் எல்லையை தொட்டாலும், தனது குட்டியை மட்டுமே நினைத்த தாய் யானையின் அன்பு, பலரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ, wildfriends_africa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் , இந்த தாய் யானையின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில், வறட்சியான காட்டுப் பகுதியில் தோசேற்றில் சிக்கி, உயிரிழப்பின் விளிம்பில் இருந்த ஒரு பெண் யானை காணப்படுகிறது. அது பலவீனமாகவும், உயிரிழப்பிற்கு நெருங்கியதாகவும் இருந்த போதிலும், அதில் இருந்து தப்பிப்பதற்கான போராட்டத்தை விட, தன் குட்டியினை சுற்றி தும்பிக்கையால் அன்புடன் சுற்றுவது, மக்களின் மனதை நெகிழவைக்கிறது.
View this post on Instagram
குட்டி யானையும் நிலத்தில் சோர்ந்த நிலையில், தாய் யானை அதனை தூக்க முயற்சிக்கிறது. “கவலைப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்” என தாய் மொழி பேச முடியாவிட்டாலும், அவளது உணர்வுகள் பேசுகின்றன. சோகம் நெஞ்சை கிள்ளும் இந்தக் காட்சிக்கு ஒரு நல்விளைவும் உண்டு. பின்னர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உயிரியல் பாதுகாப்புப் பணியாளர்கள், தாய் யானையையும் குட்டியையும் சேற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். இந்த தகவலும் வீடியோவுடன் சேர்க்கப்பட்டிருந்தது.
மேலும் “வறட்சியின் கோரத்தையும் எதிர்கொள்கின்ற இந்த துணிச்சலான தாய் யானையின் அன்பும், நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறது. தன் உயிரையே பணயம் வைத்து, தன் குட்டிக்காக அவள் போராடினாள். இந்த அன்புக்கு வார்த்தைகள் தேவை இல்லை.” என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
