இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, மழை குறுக்கிட்ட இடைவேளையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ரசிகர்களுடன் நடத்திய  ஜாலியான உரையாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. காயத்தின் வலியிலும் ரசிகர்களை மகிழ்வித்த அவரது குறும்புத் தனம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொழும்புவில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது திடீரெனக் கடுமையான மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை மூடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தச் சமயத்தில், போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வீரர் ரிஷப் பந்த், டிரெஸ்ஸிங் அறைக்குச் செல்லாமல் பவுண்டரி எல்லையின் அருகே அமர்ந்திருந்தார். மழைத் தண்ணீரிலும் நனைந்தபடி இருந்த அவர், மைதான ஊழியர்களுக்குத் தண்ணீர் பாட்டில்களை வழங்கி உதவினார்.

 

மழையில் நனைந்துகொண்டிருந்த ரிஷப் பந்தைப் பார்த்த ஸ்டண்டில் இருந்த ரசிகர்கள் ரிஷப் அண்ணா, உங்களுக்குக் காய்ச்சல் வந்துவிடும்! இங்கிருக்கும் மழை வித்தியாசமானது என்று பாசத்துடனும் எச்சரிக்கும் வகையிலும் கத்தினார்கள். உடனே சிரித்தபடியே திரும்பிய பந்த், ரசிகர்களைப் பார்த்து ஜாலியாகக் கிண்டலாகப் பதிலளித்தார். நீங்கள் எனக்குக் காய்ச்சலை ஏற்படுத்தாமல் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே… வரவில்லை என்றாலும் எப்படியாவது வரவவைத்து விடுவீர்கள் போல்  என்று அவர் கூறியதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகமாகச் சிரித்தனர். உடனே ரசிகர்கள் இல்லை, இல்லை அண்ணா… நாங்கள் உங்களை நேசிக்கிறோம் அண்ணா என்று குரல் எழுப்பினர்.

காயத்தால் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் சிறிது சோர்வாகவும் எரிச்சலாகவும் காணப்பட்டாலும், ரசிகர்களின் அன்பான பேச்சுக்கு அவர் சிரித்தபடியே பதிலளித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மேலும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்களுடன் அவர் காட்டும் இந்த இயல்பான மற்றும் கலகலப்பான பிணைப்பு சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.