நாடாளுமன்ற உறுப்பினரும், ஆல் இந்தியா AIMIM கட்சித் தலைவருமான ஒவைசி, ‘வந்தே மாதரம்’ விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காந்தி, நேதாஜி மற்றும் தாகூர் போன்ற தேசியத் தலைவர்களின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பிய கேள்விகள் தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹதராபாத்தில் நடைபெற்ற ‘ஜல்சா-ஏ-ரஹ்மத்துல்-லில்-ஆலமீன்’ கூட்டத்தில் உரையாற்றிய ஒவைசி,

மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்கள் ஒன்றிணைந்து வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்று முடிவு செய்தனர். அப்படியிருக்க, தற்போதைய அரசு சட்டம் இயற்றி புதிய விதிகளைக் கொண்டுவருவது அந்தத் தலைவர்களை அவமதிக்கும் செயலாகும் என்று ஒவைசி குற்றம்சாட்டினார்.

“நரேந்திர மோடி மகாத்மா காந்தியை விட அதிக புத்திசாலியா? நேதாஜி சுபாஷ் சந்திர போஸை விட நாட்டை அதிகம் நேசிக்கிறாரா? அல்லது இரவீந்திரநாத் தாகூரை விட விவேகமானவரா?” என்று ஒவைசி பிரதமர் மோடியை  நோக்கிகேள்வி எழுப்பினார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ‘பாரத் மாதா’ என்று தொடங்கவில்லை, மாறாக ‘இந்திய மக்களாகிய நாங்கள்’என்றுதான் தொடங்குகிறது. நாம் அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள்,” என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், “சிலர் நாட்டை வணங்குகிறார்கள், சிலர் இந்த நாட்டின் மண்ணில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த நாடு எல்லோருடையது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘வந்தே மாதரம்’ பாடலின் வரிகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வம்சத்தின் வரலாற்றைச் சுட்டிக்காட்டி, நேரு, காந்தி, போஸ் மற்றும் படேல் ஆகியோர் வந்தே மாதர வரிகளை 6-லிருந்து 2 ஆகக் குறைத்து தேசத்திற்கு எது சிறந்தது என்று முடிவு செய்தனர் என்றார். மேலும், பாஜக அரசு இதை வைத்து அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மறுபுறம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி வோட்டு வங்கி அரசியலுக்காகவும் சட்டத்தை மீறும் வகையிலும் 2 பத்திகளை மட்டும் பாடுவது ‘தேசவிரோதமானது’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், எந்தவொரு கட்சியும் நாடாளுமன்றச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்றும் பாஜக தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.