கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள டாக்டர் மலகாரெட்டி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நடந்த அகத்தேர்வின் போது, மாணவர் ஒருவர் தனது பேராசிரியரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மெட்டீரியா மெடிகா’ பாடத் தேர்வின் போது, ஷாபாஸ் என்ற மாணவர் மொபைல் போனைப் பயன்படுத்தி பிட்டு அடித்ததைக் கண்காணிப்பாளர் சிவராஜ்குமார் கண்டுபிடித்துள்ளார். இதனால் மாணவரின் விடைத்தாளைப் பறிமுதல் செய்துவிட்டு அவரை அறையை விட்டு வெளியேறுமாறு பேராசிரியர் உத்தரவிட்டுள்ளார்.

​இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், திடீரெனப் பேராசிரியரைத் தாக்கத் தொடங்கினார். அங்கிருந்த மற்ற மாணவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியும், மீண்டும் உள்ளே வந்து பேராசிரியரைத் தாக்கிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவர் இனி வரும் எந்தத் தேர்வுகளையும் எழுத முடியாதவாறு கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது. தாக்குதலுக்குள்ளான பேராசிரியர் இது தொடர்பாக இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.