தமிழக அரசியல் களத்தில் ‘ஊழல் எதிர்ப்பு’ மற்றும் ‘தூய சக்தி’ என்ற முழக்கங்களோடு அதிரடியாக என்ட்ரி கொடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது தங்களது ஆரம்பக்கட்ட பலத்தை இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்சியில் யார் இணைந்தாலும் அவர்கள் தங்களின் குற்ற வழக்குகளைத் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் சந்திக்கத்தான் வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்திருந்தாலும், தற்போதைய தவெகவின் நகர்வுகள் தொண்டர்கள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, குட்கா வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு போன்ற பெரும் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நபர்களைக் கட்சியில் இணைப்பது எந்த விதத்தில் பொருத்தமானது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே மாற்று அரசியலை நோக்கி நகர்வதாகக் கூறிவந்த நிலையில், இப்படிப்பட்ட கறைபடிந்த பின்னணி கொண்ட நபர்களைக் கட்சியில் சேர்ப்பது, அக்கட்சியின் தலைவர் விஜய் மீது பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை அடியோடு குறைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
“பழைய முகங்களை வச்சுக்கிட்டு எப்படி புதிய அரசியலைத் தர முடியும்?” என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் தவெகவின் இந்த முடிவைக் கடுமையாக விவாதித்து சாடி வருகின்றனர். இதனால் ஆரம்பத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்ட வேகம் குறைந்து, தவெகவின் பலம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறதோ என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
