உலகையே உலுக்கும் வகையில் வடகொரியா அடுத்தடுத்து பல கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், தற்போது வடகொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவின்படி, பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டன. இவை ஜப்பான் கடற்பகுதியை இலக்கு வைத்து ஏவப்பட்டதால், ஜப்பான் அரசு உடனடியாக தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பிரதமர் அலுவலகம் மூலமாக அவசர நிலையை அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடியவை என்றும், சின்போ பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இவை விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 140 கிலோமீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணைகள் பாய்ந்து சென்றுள்ளன. வடகொரியாவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையைத் தொடர்ந்து தென்கொரியா தனது ராணுவ உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இது குறித்து தென்கொரிய ராணுவத் தளபதி கூறுகையில், “வடகொரியாவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். இது குறித்த தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் பகிர்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
மறுபுறம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஈரான் தனது ‘ஹார்முஸ்’ நீரிணையைத் திறந்துவிட்டது. ஆனால், தற்போது மீண்டும் அந்த நீர்வழியை ஈரான் மூடியுள்ளது. ஈரான் நாட்டு கப்பல்கள் மீதான தடையை அமெரிக்கா நீக்கும் வரை இந்த வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது.
மேலும் இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணுஆயுதச் சோதனைகளையும், ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தி வருவது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வடகொரியாவின் இந்தச் செயலுக்கு ஐநா சபையும் அமெரிக்காவும் என்ன பதில் அளிக்கப்போகின்றன என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
