கால்பந்து உலகின் வாழும் சாதனையாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ச நாயகனாகவும் திகழ்பவர் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது 41 வயதாகும் அவர், பல உலக சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 பிபா (FIFA) உலகக்கோப்பைத் தொடரில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ விளையாடி வரும் நிலையில், இதுவே அவரது கடைசி உலகக்கோப்பைத் தொடராக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்தச் சூழலில், நடப்பு உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு ரொனால்டோ தனது சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ள செய்தி ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் அதிர வைத்துள்ளது.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த ரகசியத்தை உடைத்துள்ள காட்டியா அவிரோ, ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து பயணம் மிக விரைவில் நிறைவடைய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் விளையாடவிருக்கும் எஞ்சிய ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் முழுமையாக ரசித்துக் கொண்டாடுமாறும் அவர் உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ரொனால்டோவின் ஓய்வு குறித்து அவரோ அல்லது போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனமோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அவரது உடன்பிறந்த சகோதரியே இதனைத் தெரிவித்துள்ளதால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
