கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் சங்கீதா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் சங்கீதா தமிழரசியை அலுவலகத்திற்கு உள்ளே வைத்து பூட்டியுள்ளார். அதன் பிறகு பதிவேடுகளை தனது ஸ்கூட்டியில் எடுத்து சென்றார். அந்த சமயம் தமிழரசி சத்தமாக கதவை திறக்குமாறு கூறியுள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் சங்கீதா அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தமிழரசி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அரை மணி நேரம் கழித்து தமிழரசி மீட்கப்பட்டார். சங்கீதா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சரியாக வேலைக்கு வர மாட்டார் எனவும், தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்ய வரும் நாளில் அலுவலகம் வரமாட்டார் எனவும் தெரிகிறது. கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்திற்கு உள்ளேயே பூட்டி சென்ற சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.