பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பாதுகாப்புச் சோதனையின் போது விமான நிலைய ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா செல்வதற்காக விமான நிலையம் வந்த கிம் சுங் கியுங் என்ற பெண்ணிடம், அவரது பையில் இருந்து எச்சரிக்கை ஒலி வருவதாகவும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் ஆப்பன் அகமது என்ற ஊழியர் கூறியுள்ளார்.

 

வழக்கமான சோதனை இடத்திற்குச் சென்றால் விமானத்தைத் தவறவிட நேரிடும் எனக் கூறி அப்பெண்ணை ஆண்கள் கழிவறைக்கு அழைத்துச் சென்று அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ஆப்பன் அகமதுவை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை வழங்கும் அமைப்பான ஏஐசாட்ஸ், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.