நவீன உலகக் கார்ப்பரேட் கலாசாரத்தில் தங்களது வாழ்க்கையையும், வங்கிச் சேமிப்பையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்த நினைப்பவர்கள், மகாபாரதக் காலத்தின் மாபெரும் அறிஞரான மகாத்மா விதுரர் நல்வாழ்வு மற்றும் வெற்றி குறித்துக் கூறியுள்ள வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது.

விதுர நீதியின் கூற்றுப்படி, ஒரு மனிதன் பேராற்றலையும், அபார செல்வத்தையும், தொழில்முறை வெற்றியையும் அடைய வேண்டுமானால், அவனது முன்னேற்றத்தைத் தடுத்து உள்ளுக்குள்ளேயே அவனை அழிக்கும் 6 தீய பழக்கங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 விதுர நீதி ஸ்லோகத்தின்படி, அதிகப்படியான தூக்கம், எப்போதும் சோர்வாக இருக்கும் மன மந்தநிலை, புதிய முயற்சிகளை எடுக்கப் பயப்படும் அச்சம், சிந்திக்கும் திறனைக் கெடுக்கும் அதீத கோபம், உழைப்பைத் தடுக்கும் சோம்பேறித்தனம் மற்றும் இன்றைய வேலையை நாளைக்குத் தள்ளிப்போடும் அலட்சியப் போக்கு ஆகிய ஆறு குணங்களை லட்சுமி தேவியின் அருளையும், வெற்றியையும் பெற விரும்பும் எவரும் உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றிபெற பல்வேறு மேலாண்மைப் புத்தகங்களைப் படித்து, ஊக்கமூட்டும் ஆடியோக்களைக் கேட்பதை விட, விதுரர் கூறியுள்ள இந்த ஆறு ‘சைலண்ட் கில்லர்’ பழக்கங்களை ஒழிப்பதே உண்மையான முன்னேற்றத்திற்கான அடித்தளமாகும்.

அதிகாலையில் விழித்து நேர நிர்வாகத்தைக் கையாளுதல், தொழில் மற்றும் வேலையில் ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், கோபத்தைக் கட்டுப்படுத்தும் நிதானம் மற்றும் சுறுசுறுப்புடன் செயல்படுதல் ஆகியவை மட்டுமே ஒரு சாதாரண மனிதனை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என விதுர நீதியில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

1. அதிகப்படியான தூக்கம்:

காலை நேரத்துத் தூக்கம் மிகவும் சுகமானதுதான், ஆனால் இந்தத் தூக்க வலையில் எவர் ஒருவர் சிக்கிக் கிடக்கிறாரோ, அவர் வாழ்க்கைப் போட்டியில் மிகவும் பின்தங்கி விடுகிறார். காலத்தை வென்று சாதிக்க நினைப்பவர்கள் சூரியனின் முதல் கதிர் எழுவதற்கு முன்பே விழிப்பது அவசியமாகும்.

2. மன மந்தநிலை:

பணி நேரத்தில் கொட்டாவி விடுவது, உடலில் போதிய ஆற்றல் இல்லாதது போல் உணர்வது அல்லது எந்நேரமும் சோர்வாகவே இருப்பது மன மந்தநிலையாகும். இந்த நிலை ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் முற்றிலுமாகப் பூஜ்ஜியமாக்கிவிடும்.

3. அச்சம் / பயம்:

தொழிலோ அல்லது வேலையோ, எங்கு பயப்படுகிறோமோ அங்கு தோல்வி நிச்சயம். தோல்வி ஏற்பட்டுவிடுமோ அல்லது மாற்றம் வந்துவிடுமோ என்ற அச்சமே ஒரு மனிதனைப் புதிய முயற்சிகளை எடுக்க விடாமல் தடுக்கிறது. இந்தத் துணிவின்மையைக் கைவிடாத வரை பெரிய அளவில் பணம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்காது.

4. அதீத கோபம்:

கோபம் என்பது மனிதனின் பகுத்தறியும் திறனைச் செயலிழக்கச் செய்துவிடும். எமோஷனல் மேனேஜ்மென்ட் இல்லாத காரணத்தால், அதீத கோபத்தில் எடுக்கப்படும் ஒரு தவறான முடிவு, உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நீங்கள் செய்த முதலீடுகளையும் ஒரே நொடியில் நாசமாக்கிவிடும்.

5. சோம்பேறித்தனம்:

சோம்பேறித்தனமும் பெரும் செல்வமும் ஒருபோதும் ஒரே இடத்தில் ஒன்றாக இருக்க முடியாது. கடுமையாக உழைப்பதில் இருந்து நீங்கள் பின்வாங்கினால், ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் கனவை மறந்துவிடுங்கள்; சுறுசுறுப்பான செயல்பாடே செல்வத்தை ஈர்க்கும் காந்தமாகும்.

6. தள்ளிப்போடும் பழக்கம்;

இன்றைய வேலையை நாளைக்கும், நாளைய வேலையை மறுநாளுக்கும் தள்ளிப்போடும் பழக்கமே வெற்றியைத் தடுக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாகும். காலத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படாத எவரையும், காலம் மிக இரக்கமின்றி பின்னுக்குத் தள்ளிவிடும் என்று விதுரர் எச்சரிக்கிறார்.