இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றதில் இருந்தே, இந்திய அணி விளையாடிய முதல் 5 போட்டிகளில் 4-ல் தோல்வியடைந்து கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து புதிய சரிவைச் சந்தித்துள்ளது. நாட்டிங்ஹாமில் நடந்த இப்போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, பவர்-பிளேயிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து மோசமாக தோற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தபோது, முதல் 7 போட்டிகளில் 6-ல் வென்றும், அதன் பின் தொடர் தோல்விகளால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது போல, ஷ்ரேயாஸ் ஐயர் தனது ‘அதிர்ஷ்டமில்லாத’ கேப்டன்சியை இந்திய அணிக்கும் கொண்டு வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Shreyas Iyer bringing in his PBKS bad luck mess to Indian team as well🥴
— Sanatan Brigade (@SanatanSense) July 7, 2026
கேப்டன்சியில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 3 மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்விக்கு காரணமானவர், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 68 ரன்கள் அடித்தாலும், அடுத்த இரு இன்னிங்ஸ்களில் 37 மற்றும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். குறிப்பாக, நாட்டிங்ஹாம் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய லெக்-ஸ்டம்ப் பந்தை பவுண்டரிக்கு விரட்டாமல், ஜேக்கப் பெத்தெலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான விதம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இத்தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஐயர், “இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மோசமான தோல்வி. இது 200 ரன்கள் அடிக்கக்கூடிய பிட்ச் கிடையாது. பவர்-பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் மொமண்டத்தை பிடிக்க முடியாமல் போனது. திட்டமிட்டபடி எங்களால் பேட்டிங்கில் செயல்பட முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
