ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி நான்காம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அதன் பின் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிட இருக்கின்ற நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் அதிமுகவே  போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சென்னையில் அ.ம.மு.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில் ஜனவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்படும். அதேபோல் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அ.ம.மு.க போட்டியிட விரும்புகிறார்கள். நானும் கூட போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன்.

வருகிற 27-ஆம் தேதி அதற்கான முடிவு அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். அதன் பின் அ.தி.மு.க விவகாரம் குறித்து பதில் அளித்து பேசிய அவர், ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னம் இருந்தாலே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது. பண பலத்தை நம்பி தான் இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அ.தி.மு.க போட்டியிடும் என கூறியுள்ளார்.