மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் அருகே உள்ள நந்தகான் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், பிஞ்சு சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மையத்தில் இருந்த ஒரு பெண், அங்கிருந்த ஒரு சிறுமியின் நெஞ்சிலேயே மிகக் கொடூரமாக எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவரம் அறியா சிறுமி என்றும் பாராமல், அந்தப் பெண் இழைத்த இந்த அக்கிரமமும் அநாகரிகமான நடத்தையுமே இந்த விவகாரம் பூதாகரமாக வெடிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. ​இந்தச் சம்பவம் குறித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்து வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.

பிஞ்சு குழந்தையைத் தாக்கிய அந்தப் பெண் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொணரும் வகையில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட கொடூரப் பெண் மீது சற்றும் தாமதிக்காமல் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பிஞ்சு சிறுமிக்கு விரைவாக நீதி கிடைப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.