ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததால் இன்னும் 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தற்போதே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியும் பூத் கமிட்டிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைதியான முறையில் செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இரட்டை இலை சின்னம் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கிடைக்குமா அல்லது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்குமா என்ற குழப்பம் தற்போது அதிமுகவில் இருக்கிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு கூட நாங்கள் தயாராக தான் இருக்கிறோம் என்று எடப்பாடி தரப்பு கூறி வருகிறது. தனித்து நின்று போட்டியிட்டால் எடப்பாடியின் இமேஜ் உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாஜக கட்சி தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒருவேளை அந்த தொகுதியை அதிமுக கொடுக்கவிட்டால் பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாம். இதன் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா வைக்காதா என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் சின்னமும் கிடைக்காமல் பாஜகவின் கூட்டணியும் கிடைக்காமல் போனால் கடைசியில் நஷ்டம் எடப்பாடிக்கு தான் என்பதால் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஆலோசனை நடத்திய முக்கியமான முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடிக்கு தற்போது புதிய தலைவலி வந்துள்ளது.