ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் தந்தேராஸ் பண்டிகை நாளன்று நடந்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தந்தேராஸ் நாளில் லட்சுமி தேவியை வழிபடும் வேளையில், ஒரு பெண்ணை அவரது கணவரும் மாமனாரும் நடுத்தெருவில் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த அவமானகரமான சம்பவம் விவேக் விஹார் காவல் நிலையப் பகுதியில் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. வைரலான வீடியோவில், அந்தப் பெண்ணை இருவரும் அறைந்து, உதைத்து, குத்தும் காட்சிகள் தெளிவாகக் காணப்படுகின்றன. இதனை அருகில் இருந்தவர்கள் யாரும் தலையிடவில்லை; சிலர் வீடியோ எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீடியோ சமூக ஊடகங்களில் பரவியவுடன், விவேக் விஹார் போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பவ இடத்துக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்ட கணவரையும் மாமனாரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

போலீஸ் விசாரணையில், அந்தப் பெண்ணின் கணவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் என்று தெரியவந்துள்ளது. தம்பதியினர் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்ததாகவும், கணவர் தொடர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ நாளில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறி, கணவரும் மாமனாரும் சேர்ந்து பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் காணொளி வைரலானதை அடுத்து, ஜோத்பூர் காவல் ஆணையரகம்  சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு, மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.