தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்கள் கடனை அடைப்பதற்காக ‘ஹனிட்ராப்’ எனப்படும் ஆசை காட்டி மோசம் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமான அந்தப் பெண், ஆண்களுடன் பழகி அவர்களைத் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்கள் இருக்கும் அந்தரங்கத் தருணங்களை அவரது கணவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, சுமார் 1500 ஆண்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துள்ளனர். இந்த சட்டவிரோதப் பணத்தைக் கொண்டு அவர்கள் சொகுசு கார் மற்றும் நிலம் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.



இந்தத் தம்பதியினரின் பிடியில் சிக்கிய ஒரு தொழிலதிபர், அவர்களிடம் 13 லட்சம் ரூபாயை இழந்த நிலையிலும், மீண்டும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டியபோது துணிச்சலாகக் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அதிரடியாகச் செயல்பட்ட போலீஸார், அந்தத் தம்பதியினரைக் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போன்கள் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். சமூக வலைதளங்களில் அழகிய முகத்தைக் காட்டி வலைவிரிக்கும் இத்தகைய நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இச்சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.