தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி :  தாய் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

உழவே தலை என வாழ்ந்த உழைப்பு சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தை போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது.

இனம் – மண் – மக்கள் – விளைச்சல் – உணவு – மற்ற உயிரினங்கள் இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழா தான் பொங்கல் பெருவிழா! புனைவுகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா!

வானம் கொடுத்தது, பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான்நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம்.

புதுப் பானையில் புத்தரிசி போட்டு புத்தொளி ஊட்டி அடுப்பு மூட்டி பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுரையைப் போல நாடு முழுவதும் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள் அதனால் தான் இந்த தை மாதத்தை தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றத்துடன் கொண்டாட ஆயிரம் ரூபாய் ரொக்கம், பச்சரிசி  சர்க்கரை  செங்கரும்பு என பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியுள்ளோம்.

சாதி மதப் பாகுபாடுகள் எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும் – தமிழ்நாட்டு மக்கள் அனைவரும்  கொண்டாடும் சமத்துவ பொது விழாவாகவே பொங்கல் விழா என்றும் திகழ வேண்டும். தாய் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும் செங்கரும்பை போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தைத்திருநாள் தமிழர் பெருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.