உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் இன்று மாலைக்குள் மீட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 11 வது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவுகள் குழாய் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.

இத‌னிடையே எண்டோஸ்கோப் மூலமாக அனைத்து தொழிலாளர்களும் நலமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க 48 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் 12 மீட்டர் தான் தோண்ட வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.