மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உலக எரிசக்தி சந்தையை மாற்றியமைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஈரான் அடிக்கடி ‘ஹோமுஸ்’ (Strait of Hormuz) கடல் பாதையை மூடிவிடுவோம் என்று மிரட்டி வரும் நிலையில், அதற்கு மாற்றாக அரபு தீபகற்பத்தின் வழியாக இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு நேரடியாக நிலத்தடி குழாய்கள் (Pipelines) மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டு வரும் பிரம்மாண்ட திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம், வளைகுடா நாடுகளின் எண்ணெய் இனி ஆபத்தான கடல் வழிக்குப் பதிலாக, பாதுகாப்பான தரைவழியாக இஸ்ரேல் வழியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குச் சென்றடையும்.

ஈரானின் மிகப்பெரிய எரிவாயு தளமான ‘சவுத் பார்ஸ்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 119 டாலராக எகிறியுள்ள நிலையில், இந்த ‘எனர்ஜி காரிடார்’ திட்டம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஈரான் வைத்திருக்கும் ‘ஹோமுஸ் மிரட்டல்’ இனி எடுபடாது என்பதோடு, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இது ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும்.