சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் கண்காணிப்பை எவ்வளவு தான் பலப்படுத்தி வந்தாலும் இந்த திருட்டு நின்ற பாடில்லை. இந்த நிலையில் இந்த திருட்டுகளை தடுக்கும் விதமாக நடமாடும் நவீன கண்காணிப்பு கருவிகளை சென்னை போலீசார் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள். இந்த கேமராக்களை இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் சாலை சந்திப்புகளில் வைக்கிறார்கள்.

இது சாலையில் வரும் வாகனங்களுடைய நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை துல்லியமாக படம் பிடிக்கும்.  அதே போல திருடு போன வாகனங்களின் எண்களை இந்த கேமராவில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கும். இந்த வாகனங்கள் சாலை வழியாக வந்தால் அதை துல்லியமாக படம் பிடித்து போலீசாருக்கு எச்சரிக்கை செய்யும். இதையும் தாண்டி திருட்டு இருசக்கர வாகனம் சென்றால் சம்பந்தப்பட்ட காவல் மாவட்ட ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலமாக இனி இருசக்கர வாகன திருடர்கள் காவல்துறையிடம் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டது.