மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஒரு ஏர்பிஎன்பி தங்கும் விடுதியின் உரிமையாளர், தனது விடுதியில் தங்கிய வாடிக்கையாளர்கள் சிலர் விடுதியைச் சேதப்படுத்தியதாகவும், ஊழியர்களை மிரட்டியதாகவும், அங்குள்ள காவலாளியை தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விடுதியை காலி செய்யுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர்கள் இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளனர். தங்குமிடம் சேதமடைவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை விடுதி உரிமையாளர் காட்டியபோதிலும், தங்களது வருகைக்கு முன்பே விடுதி சேதமடைந்திருந்ததாகக் கூறி வாடிக்கையாளர்கள் தங்களது குற்றத்தை மறுத்துள்ளனர்.

“>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் விபரங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ஷில்லாங் மற்றும் மேகாலயாவில் உள்ள மற்ற விடுதி உரிமையாளர்கள் இவர்களுக்குத் தங்குமிடம் வழங்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், விடுதி ஊழியர்களைத் தாக்கிய மற்றும் பொது ஒழுக்க உணர்வே இல்லாமல் சொத்துக்களைச் சேதப்படுத்திய அந்த நபர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.