அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழா, பெரும் கூட்ட நெரிசலால் கடும் குழப்பத்தில் முடிந்துள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள, அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் பெருமளவில் திரண்டனர்.

மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இரண்டு நிமிட வீடியோவில், மக்கள் ஒருவரையொருவர் முட்டி மோதிக்கொண்டும், தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

“>

இந்த அராஜகமான சூழலை நெட்டிசன்கள் இந்தியாவின் பரபரப்பான “காய்கறி சந்தை” உடன் ஒப்பிட்டு, “அமெரிக்க சப்ஜி மண்டி” என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் கலவையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

அதோடு சிலர் இந்த காட்சி தங்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய சந்தைகளை நினைவூட்டுவதாகவும், ஒருவித ஏக்கம் தருவதாகவும் பாசிட்டிவாகக் கூறினாலும், பெரும்பாலானோர் இந்த நாகரிகமற்ற நடத்தையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், நல்ல கல்வி கற்றாலும் சிலர் தங்கள் ஒழுக்கமற்ற குணத்தை மாற்றுவதில்லை என்றும், இத்தகைய செயல்கள் சர்வதேச அளவில் இந்தியர்களைப் பற்றிய தவறான பிம்பத்தையே உருவாக்கும் என்றும் நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.

மேலும், தற்போது இந்தியாவிலேயே Zepto, போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் நவீன சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டதால், இந்திய சந்தைகளே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த NRI-கள் இன்னும் பழைய காலத்து இந்தியாவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.