இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கின் மிகப்பெரிய கூடாரமாக மாறிவிட்டன. விதவிதமான சாகசங்கள், வினோத நிகழ்வுகள் என நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு வகுப்பறையில் நடந்த வேடிக்கையான ‘கர்மா’ வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.  சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு மாணவன் தனது வகுப்பறையில் பெஞ்ச் மீது அமர்ந்து, கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்தபடி கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையிலோ அல்லது சிறு தூக்கத்திலோ இருக்கிறார். அப்போது அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவிக்கு ஒரு குறும்பு எண்ணம் தோன்றுகிறது.

மாணவன் கையை ஊன்றித் தலை சாய்த்திருப்பதை கவனித்த அந்த மாணவி, திடீரெனப் பின்னால் திரும்பி மாணவனின் கையைத் தட்டிவிட முயல்கிறார். கையை அகற்றிவிட்டால் மாணவனின் தலை பெஞ்சில் மோதும், அவர் அதிர்ச்சியடைவார் என்று அந்த மாணவி எதிர்பார்த்தார். ஆனால், மாணவி எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அங்கு ஒரு சம்பவம் நடந்தது. மாணவனின் கையை அவர் வேகமாகத் தட்டிவிட்டபோது, மாணவன் நிலைதடுமாறவில்லை. மாறாக, கையைத் தட்டிய வேகத்தில் அந்த மாணவி நிலைதடுமாறி, தனது இருக்கையிலிருந்து பின்னோக்கி மல்லாக்க விழுந்தார்.

யாரை விழ வைக்க வேண்டும் என்று நினைத்தாரோ அவர் நிதானமாக இருக்க, குறும்பு செய்த மாணவி தானே கீழே விழுந்த இந்த வீடியோ பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “அடுத்தவருக்குக் குழி பறித்தால் அது நமக்கே வந்து சேரும் என்பதற்கு இதுவே சாட்சி”, “இன்ஸ்டன்ட் கர்மா (Instant Karma) என்பது இதுதான்” எனப் பல்வேறு வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சிறு குறும்பு வினையாக முடிந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.