மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன், தவறி விழுந்ததில் அவனது தாடையை இரும்பு கம்பி ஒன்று கொடூரமாகத் துளைத்து வாயின் மறுபக்கம் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. எனினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின் சாதுரியமான செயலால் அச்சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளான்.

அதாவது  17 வயது சிறுவன் ஒருவன், கடந்த வியாழக்கிழமை அங்குள்ள ஒரு எல்லைச் சுவரின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் நிலைதடுமாறி, சுவரில் பொருத்தப்பட்டிருந்த கூர்மையான இரும்பு கோண கம்பி (Iron Angle) மீது விழுந்துள்ளான். இதில், அந்த இரும்பு கம்பி சிறுவனின் தாடையைக் கிழித்துக் கொண்டு, வாயின் மறுபுறமாக வெளியே வந்தது.

இந்தக் கொடூரமான விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், தாடையில் இரும்பு கம்பி குத்திய நிலையிலும் அந்தச் சிறுவன் அழாமலும், ரத்தம் வராமலும், கடுமையான வலியைக் காட்டாமலும் அமைதியாக நின்று கொண்டிருக்கிறான்.

அவனைச் சுற்றியிருந்த பொதுமக்கள் நிலைமையைப் பதற்றமின்றி கையாண்டுள்ளனர். சுவரோடு இருந்த அந்த நீளமான கம்பியை அப்படியே அகற்ற முடியாததால், உடனடியாக  எனப்படும் கம்பி அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு வந்து, அந்த இரும்பு கம்பியை லாவகமாக வெட்டி சிறுவனைச் சுவரிலிருந்து விடுவித்தனர்.

 

தாடையில் துண்டிக்கப்பட்ட கம்பியுடன் இருந்த சிறுவனை உடனே உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அங்குள்ள நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் சிறுவனுக்கு அவசரக் கால அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவனது தாடையை ஊடுருவியிருந்த இரும்பு கம்பியை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அந்தச் சிறுவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, நலமுடன் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுவன் இத்தகைய கொடூர விபத்திலிருந்து உயிர் பிழைத்ததை ‘அதிசயம்’ எனக் கூறும் அப்பகுதி மக்கள், விபத்து நடந்த நேரத்தில் பதற்றமடையாமல் கம்பியை வெட்டி எடுத்து உதவிய உள்ளூர் இளைஞர்களின் துரிதமான செயல்பாட்டைப் பாராட்டி வருகின்றனர்.