தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என் ரவி பயன்படுத்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் இலச்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டிருப்பதால் மாநில அரசின் இலச்சினையும் அழைப்பிதழில் தவிர்க்கப்பட்டு மத்திய அரசின் இலச்சினை மட்டுமே இடம்பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து தி.மு.க சார்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே காசி தமிழ் சங்கம் விழாவில் வரலாற்று பண்பாடு குறித்து பேசும்போது, காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி உள்ளது. அந்த அழைப்பிதழில் பழையபடி தமிழக அரசின் இலச்சினை இடம் பெற்றது மட்டுமல்லாமல் தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் சுமூக போக்கிற்கு வந்துள்ள நிலையில் ஆளுநரின் விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.