ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கின் விசாரணை நாளைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில் முக்கியமான சில வாதங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா? என அரசு  சார்பில் சரமாரியான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பேரணியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? தேவர் குருபூஜை உள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவது காவல்துறைக்கு நீண்ட சிரமத்தை ஏற்படுத்தும் பேரணியில் யார் கலந்து கொள்வார்? எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? பேரணி செல்லும் பகுதியில் வேறு மத வழிபாடு தளம் உள்ளதா? என எந்த விவரமும் இல்லை என அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

மேலும் அரசு தரப்பில் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், எந்த அசம்பாவிதமும் நடைபெறாது, மேலும் பேரணி குறித்து முழு விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரணை குறித்து நாளை உத்தரவு என்பது வழங்க இருப்பதாக கூறி இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த கோரி இந்த மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக கொண்டாடப்படும் விதமாக விஜயதசமி 22.10.2023 நாள் அன்று ஆர்எஸ்எஸ் சார்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை காக்கி, வெள்ளை சட்டை, தொப்பி பெல்ட், பிளேக் ஷூ அணிந்து இசைவாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சுற்றி வந்து இறுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமாக காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் காவல்துறை இதுவரை எந்த அனுமதி வழங்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி அணிந்து கையில் பாரத மாதா கொடியுடன் ஊர்வலம் நடத்த இருக்கிறோம். இந்தியாவில் உள்ள அனைவரும் சகோதரத்துவமாகத்தான் பார்க்கப்படுகிறது. மேலும் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்புகளோ, எந்தவித அசம்பாவிதம் ஏற்படாது. ஊர்வலத்தின் போது  ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். அது போன்று இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதில் உள்ளவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.

அதேபோல இந்தியாவை பாரதம் என்று சொல்கிறோம் என தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆகியோர் வாதிடப்பட்ட போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தென் மாவட்டங்களில் 20 மனுக்கள்அளிக்கப்பட்டது. அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த அனுமதி கடிதத்தில் எப்போது ஊர்வலம் நடத்தப்படும்?, எப்போது எங்கு ஆரம்பிக்கப்படும்? எங்கு முடிக்கப்படும். மேலும்  அந்த ஊர்வலத்தின் போது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்களா? அல்லது ஊர்வலம் செல்லும் பாதையில் பிற மத வழிபாட்டு தலங்கள் இருக்கிறதா? என்பது குறித்து எந்த விவரங்களும் இல்லை. இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்ற வாதங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் தான்  பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு தீர்ப்புக்காக நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.