
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (11), சோஷிகா (6) என்ற மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2023 அக்டோபர் நான்காம் தேதி அறுவை சிகிச்சை மூலம் லதாவுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததால் கணவன் மனைவி இருவரும் இனிமேல் எங்களுக்கு குழந்தை வேண்டாம் என கூறி குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு கையெழுத்து போட்டுள்ளனர்.
ஆப்ரேஷன் செய்ததால் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கி லதா வீட்டிற்கு வந்துவிட்டார். சிறு நாட்களிலேயே லதாவுக்கு போடப்பட்ட தையல் பிரிந்து சிதலம் அடைந்து காணப்பட்டது. இதனால் மீண்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த தையலை அகற்றிவிட்டு மீண்டும் தையல் போட்டதால் ஒரு மாத காலமாக லதா மிகவும் சிரமப்படுகிறார். இந்த தம்பதியினர் தங்களது மூன்றாவது குழந்தைக்கு வம்சிகா என பெயர் வைத்தனர். பிறந்த நாளும் கொண்டாடினர்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட லதா தனியார் மருத்துவமனையில் சென்று பரிசோதித்தார். அப்போது அவர் மீண்டும் கர்ப்பமானது தெரியவந்தது. ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த நிலையில் எப்படி எனக்கு குழந்தை பிறக்கும் என கேட்டு லதா கூச்சலிட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் என்ன செய்வது என்று அறியாமல் கதறி அழுதனர். செங்கல்பட்டில் இருக்கும் தனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.