அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அறுவை சிகிச்சை அறையில் பணியில் இருந்த போது அங்கு சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளியுடன் கையில் கத்திரிக்கோலை பிடித்தபடி செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்களும் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி இதனைப் பார்த்த மருத்துவமனை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஆர் டி ஓ ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

விசாரணையில் மணிகண்டனின் மனைவி கேட்டுக் கொண்டதற்காக நோயாளியுடன் ஆபரேஷன் தியேட்டரில் வைத்து செல்பி எடுத்ததாகவும் அது எப்படி வலைதளத்தில் வெளியானது என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர் டி ஓ ராமகிருஷ்ணன் மணிகண்டனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனையின் டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.