மத்தியப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கஜுராஹோவிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஆடம்பர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணம் செய்து இந்திய கிராமிய கலாசாரத்தை ரசித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மிட்செல் மோரல் மற்றும் ரமோனா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள், புந்தேல்கண்ட் பகுதியின் எளிய வாழ்க்கை முறை, உள்ளூர் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த தனித்துவமான பயணத்தை மேற்கொண்டனர்.

“>

மேலும் கஜுராஹோவின் கிராமப்புற அழகை ரசித்தபடி அவர்கள் சென்ற இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இந்திய கிராமிய சுற்றுலாவின் மீதான ஆர்வத்தை உலகளவில் அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து போன அந்தப் பயணிகள், இந்திய கிராமங்களின் அமைதியான சூழல் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தனர்.

சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு உள்ளூர் கலாசாரத்திற்கு மதிப்பளித்து மாட்டு வண்டியில் பயணம் செய்தது, புந்தேல்கண்ட் பகுதியின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுவதுடன் அங்குள்ள மக்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வு இந்திய கிராமிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.