ஆசிட் தாக்குதலால் முகத்தை மறைத்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பல பெண்கள், இன்று அதனை வென்ற மனவலிமையுடன் டெல்லி மெகராலியில் ‘ஷெரோஸ்’ என்ற கபேவை வெற்றிகரமாக நடத்தி வருவது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த கபேவில் பணியாற்றி வரும் ரூபா, தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் போது, “ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு எனது வாழ்க்கை முழுவதும் இருண்டுவிட்டது. பின்னர் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன். ஆனால் வேலை எளிதில் கிடைக்கவில்லை. இங்கு பணியில் சேர்ந்த பிறகு, நான் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்றேன். அதிலிருந்து நான் ஒரு புதிய ரூபாவாக மாறிவிட்டேன். இந்த கபேவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள ‘ஷெரோஸ்’ கபேக்களில் பயிற்சி பெற்றேன்,” எனக் கூறினார்.
மற்றொரு பணியாளர் காஜல் (19), அதைவிட கசப்பான சூழலில் இருந்து மீண்டு வந்தவர். ஜார்கண்ட் மாநிலம் ஹண்டஙா ஜங்கை சேர்ந்த இவர், 2022ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்த ஒருவர் அவரது தம்பிக்கு சேதம் விளைவிப்பதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்துடன் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் அந்த நபர் அடியாட்களுடன் வீட்டில் புகுந்து காஜல் மீது ஆசிட் வீசியதாக தகவல்.
பின்னர் காஜல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன்பிறகு டெல்லியிலேயே வேலை செய்ய முடிவு செய்து ‘ஷெரோஸ்’ கபேவில் சேர்ந்தார். “டெல்லிக்கு முதலில் வந்தபோது எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் பல மாதங்களாக கபேவில் பணியாற்றுவதால் என் திறமையை மேம்படுத்திக்கொண்டு வருகிறேன். பள்ளியில் நான் கணிதத்தில் சிறந்தேன். இந்த விபத்துக்குப் பிறகு ‘இனி என்னால் என்ன செய்ய முடியும்?’ என்ற எண்ணத்தில் நொறுங்கினேன். ஆனால் இன்று இந்த கபேவில் நிதி கவுன்டரை நம்பிக்கையுடன் கையாள்கிறேன்,” என காஜல் தெரிவித்தார்.
இதேபோல் மேலும் பல ஆசிட் தாக்குதலை எதிர்கொண்ட பெண்கள் இந்த கபேவில் பணியாற்றி வருகின்றனர். நெருப்பில் நசுங்கிய வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, பீனிக்ஸ் பறவையைப் போல தங்களைத் தாமே மேம்படுத்திக் கொண்ட இப்பெண்களின் மனவலிமை சமூகத்துக்கு ஒரு பெரிய செய்தியாக திகழ்கிறது.
