கன்னியாகுமரி மாவட்டம் குற்றி காட்டுவிளை பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின். இவர் அப்பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதன் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பம் செய்தார்.

கடந்த 19-ஆம் தேதி ஜெமின் பாகோடு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது இளநிலை உதவியாளரான விஜி என்பவர் 2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து ஜெபின் கன்னியாகுமரி மாவட்டம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெபின் விஜியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த பாகோடு பேரூராட்சி துணைத் தலைவி ஜெனிமோல் தலைமையில் கவுன்சிலர்கள் செல்வி சுகுமாரன் பால்ராஜ் உள்ளிட்ட சிலர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு விஜி யாரிடமும் லஞ்சம் பெறாதவர்.

நேர்மையான அதிகாரி. அவரை சிக்க வைப்பதற்காக வேண்டுமென்றே குற்றம் சாட்டியுள்ளனர் என கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.