சமூக வலைதளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட விசித்திர வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நகரும் ரயிலில் அசாத்திய அலட்சியத்துடன் ஏற முயன்ற நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி பயங்கர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் @rabiyask2021 என்ற கணக்கில் பகிரப்பட்டு, தற்பொழுது 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், ரயில் நிலையம் ஒன்றில் இருந்து ரயில் புறப்பட்டு வேகமாக நகரத் தொடங்குகிறது. அப்போது அங்கு நின்றிருந்த பயணி ஒருவர், ஓடும் ரயிலின் பெட்டி வாசலில் உள்ள கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே ஓடி, உள்ளே ஏறக் கடுமையான முயற்சி செய்கிறார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு பையின் (Bag) மீது அவரது கால் இடித்ததால் நிலைதடுமாறி, அவரது ஒரு கால் பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் சிக்கி விடுகிறது. நல்ல வேளையாக, அவர் ரயிலின் கைப்பிடியை மிக பலமாகப் பிடித்துக் கொண்டு உடனடியாகத் தன்னைச் சாதுரியமாகச் சமாளித்ததால், நொடிப் பொழுதில் ரயிலுக்குள் ஏறி உயிர் தப்பினார்.

“இப்படி ஆபத்தான ஸ்டண்ட்களை அடிப்பதற்குப் பதிலாக ரயில் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம்” என்றும், “கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால் குடும்பத்தினர் இவரது புகைப்படத்திற்கு மாலை போடும் நிலை வந்திருக்கும், எதற்காகத் தங்களது உயிரோடு விளையாடுகிறார்கள்?” என்றும் இந்த அலட்சிய வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நபரை மிகக் கடுமையாக வறுத்தெடுத்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.