மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய முழு விவரம் அறியாமல் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள் பேசுவதா? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், சனாதனம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தவர் – பழங்குடியினர் – பெண்ணினத்திற்கு எதிரான சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும், பெண் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம மனுவாத சனாதன சிந்தனைகளுக்கு எதிராக இந்திய துணை கண்டத்தில் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஜோதிபா பூலே, நாராயண குரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்த மரபின் நீட்சியாக சாதியின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து – சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான வாதங்கள் தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.

நிலவுக்கு சந்திராயன் விடும் இந்த காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துக்களை சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்த பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.

குழந்தை திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அதற்கும் தடை போடுகிறார். ‘நானே குழந்தை திருமணம் செய்து கொண்டவன்’ தான் என்றும் அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார். பெண்களை இழிவுபடுத்தியும் அவர்கள் வேலைக்கு போகக்கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும், மறுமணத்திற்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள்.

சமூகத்தின் சரி பாதிக்கும் அதிகமான பெண் இனத்தை சனாதனம் என்ற சொல்லை வைத்து தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பாஜக ஆதரவு சக்திகள் சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி என்று பொய்யை பரப்பினார்கள். இத்தகைய பொய்யை பரப்புவதற்காக பாஜகவினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது. இனப்படுகொலை என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படி சொன்னதாக பரப்பினார்கள்.

பொய்யர்கள் தான் இதனை பரப்புகிறார்கள் என்றால் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள் – உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதை தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். மாறாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய் செய்தியையே பரப்பி உதயநிதியை கண்டித்துள்ளார்கள்.

நான் அப்படி பேசவில்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது தங்களது பேச்சுகளை ஒன்றி அமைச்சர்கள் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆன்மீகவாதி ஒருவர் அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து தலைக்கு 10 கோடி என்று விலை வைத்திருப்பதும் அதனை பாஜக ஆதரவு சக்திகள் பரப்புவதும் தான் இவர்களது பாணியா?

அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால் அவர் மீது உத்தரபிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், ‘சனாதனத்தை பற்றி தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு செய்தி வந்தால் அது உண்மையா – பொய்யா என்பதை அறிந்து கொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு.

அப்படி இருக்கையில் அமைச்சர் உதயநிதி அவர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக பரப்பியது குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தே தான் பேசுகிறாரா? ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் ஏவ. வேலு அவர்கள் பேசிய வீடியோ ஒன்றின் உண்மை தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் மாண்புமிகு பிரதமர் அவர்கள்.

இதையெல்லாம் பார்த்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர் அவர்கள் இப்போது மக்களை திசை திருப்பி சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு குளிர் காய நினைப்பதாகவே தெரிகிறது.

மணிப்பூர் பற்றியோ – சிஏஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் – ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதானத்தை பற்றி பேசியவுடன் ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள் தான் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்களை காப்பாற்ற போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா?

அதனால் தான் நேற்று அண்ணல் அம்பேத்கரின் பேரன் திரு. பிரகாஷ் அம்பேத்கர் கூட தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பிரதமர் பதில் என்ன?
பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியானது பிரதமரை நிலை தடுமாற வைத்து விட்டது. ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை பார்த்து பயந்திருப்பது பாஜக தானே தவிர இந்தியா கூட்டணி அல்ல.

பாஜகவுக்கு இப்போது வந்திருப்பது சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு. இதை புரிந்து கொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை. மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களே, “சமூக அமைப்பில் சமூக மனிதர்களை பின்னுக்கு தள்ளி விட்டோம். நாம் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாக தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு தீர்வுகள் இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். எனவே இதற்கு மேலும் உதயநிதி பேசியது தொடர்பாக பாஜகவினருக்கு விளக்கம் வேண்டும் என்றால் மோகன் பாகவத் அவர்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

அரசியலுக்காக மத உணர்வை கிளறி ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும் நாட்டின் மீது மாறா பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி பாஜகவிடமிருந்து நாட்டை காக்கும் கடமையை மேலும் வேகப்படுத்துவார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் அதனுடைய கொள்கை கோட்பாடுகள் என்பவை வெளிப்படையானவை.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றும், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்றும் இயங்கும் இயக்கம். பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களுக்கும் – சிறுபான்மை சமூகத்துக்கும், பெண்ணினத்துக்கும், ஏழை – எளிய மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது உயர்வுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம். அதனால் தான் 6வது முறையாக ஆட்சியை கொடுத்து அலங்கரித்துள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

அதனால்தான் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை நிறைவேற்றி காட்டி இருக்கிறோம். இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்து சனாதனம் மறுத்ததை சாத்தியமாக்கியது திராவிட முன்னேற்ற கழகம். எந்த தனி மனித உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இனம் மொழி சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழும் அமைதிமிகு வாழ்க்கையை உறுதி செய்து வரும் இயக்கம், கொள்கையை அறிவுப்  பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்த காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம் அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க தான் மூழ்கும்!” என தெரிவித்தார்.