ஐதராபாத் அருகே உள்ள சஃபில்குடா பகுதியில் உள்ள புகழ்பெற்ற கட்டா மைசம்மா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாஃப் (26). இவர் சனிக்கிழமை இரவு நேகட்டா மைசம்மா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது, கோயில் வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத இடத்திற்குச் சென்ற அவர், சிலைக்கு முன்பாக மலம் கழித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அல்தாஃபை உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் செய்தி பரவியதை அடுத்து, பஜ்ரங் தள் மற்றும் பாஜக யுவ மோர்ச்சா அமைப்பினர் கோயில் வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைவர் பானு பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது; வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைக் கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

மேலும், பாஜக மாநிலத் தலைவர் என். ராமச்சந்திர ராவ் சம்பவ இடத்தைப் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “கோயில்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது” என்று பானு பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவ இடத்தில் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட அல்தாஃபின் பின்னணி மற்றும் அவருக்கு ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.