ஈரானில் வீழ்த்தப்பட்ட எஃப்-15இ போர் விமானத்திலிருந்து மாயமான அமெரிக்க விமானப்படை அதிகாரி, ஒரு ரகசிய மற்றும் துணிச்சலான தேடுதல் வேட்டை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சுமார் 48 மணிநேரம் எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருந்த அந்த உயரதிகாரியை அமெரிக்கச் சிறப்புப் படைகள் அதிரடியாகச் செயல்பட்டு மீட்டன.
இந்த மீட்புப் பணியை “அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். மீட்கப்பட்ட அதிகாரிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குவைத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிக்கலான மீட்புப் பணியில் சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவத்தின் டஜன் கணக்கான போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஈரானியப் படைகளைத் திசைதிருப்ப சிஐஏ ஒரு ‘ஏமாற்றும் பிரச்சாரத்தை’ முன்னெடுத்த நிலையில், மறுபுறம் அமெரிக்கக் கமாண்டோக்கள் வான்வழித் தாக்குதல்களின் ஆதரவுடன் எதிரி நாட்டு எல்லைக்குள் ஊடுருவி இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.
ஏற்கனவே இந்த விமானத்தின் மற்றொரு விமானி விபத்து நடந்த சில மணிநேரங்களிலேயே மீட்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது வீரரும் மீட்கப்பட்டது அமெரிக்கப் படைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. “எந்தவொரு அமெரிக்க வீரரையும் நாங்கள் கைவிட மாட்டோம்” என்று இந்த வெற்றியைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்
