கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக செல்லும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது. நேற்று சிதம்பரம் படித்துறை இறக்கம் அருகே உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை அவர் நிறுத்தினார்.
இதனையடுத்து ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்? என கேட்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து சிதம்பரம் போக்குவரத்து போலீசார் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து டிரைவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்று பேருந்துகளை வேகமாக இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.