
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரும் அதிமுக நிர்வாகியுமான முத்து பாலகிருஷ்ணன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது மற்றும் உள்ளாட்சி தேர்தலில் முன் விரோதம் உள்ளிட்ட காரணங்களால் திமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி முத்து பாலகிருஷ்ணனை லாரி ஏற்றி கொலை செய்தார்.
இதில் திமுக நிர்வாகி கருணாகரனை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் கூட ஈடுபட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன.
இதையும் “தனிப்பட்ட கொலை” என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என்று பதிவிட்டுள்ளார்.