சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலில் பயணி ஒருவருக்கு நடந்த ஏமாற்று வேலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் உள்ளூர் வியாபாரிகள் மலிவு விலையில் பவர் பேங்க் இயர்போன் போன்ற பொருட்களை விற்பனை செய்வதை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல், இந்த வீடியோவில் ஒரு வியாபாரி பிரபல நிறுவனத்தின் முத்திரையுடன் கூடிய பவர் பேங்க்கை முதலில் 500 ரூபாய்க்கு விற்க முயன்று, பின்னர் பேரம் பேசி 300 முதல் 350 ரூபாய்க்கு ஒரு பயணியிடம் விற்றுள்ளார். ஆரம்பத்தில் அது வேலை செய்ததால் அந்தப் பயணியும் அதை நம்பி வாங்கியுள்ளார்.

“>

இருப்பினும், சந்தேகத்தின் பேரில் அந்தப் பயணி பவர் பேங்க்கைத் திறந்து பார்த்தபோது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த பவர் பேங்க்கிற்குள் வெறும் களிமண் நிரப்பப்பட்டு, அதன் மேல் பழைய பேட்டரிகள் மற்றும் சில போலியான பாகங்கள் ஒட்ட வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து அந்த வியாபாரியிடம் பயணி கேள்வி எழுப்பியபோது, அவன் தன் தவறை ஒப்புக்கொள்ளாமல், “ஆட்களை வரவழைப்பேன்” என்று பயணியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளான். இந்த ஏமாற்று வித்தை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதோடு, மலிவான விலைக்கு ஆசைப்பட்டு ரயில்களில் இதுபோன்ற போலிப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.