2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை  விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சற்றுமுன் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் தற்போது 63 லட்சத்து 43 ஆயிரம் ஹேக்டர் ஆக சாகுபடி பரப்பு உள்ளது என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புன்செய் நிலங்களுக்கும், உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது. தானியங்கள் மட்டுமல்ல காய்கறிகள் மற்றும் பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்தை பாதுகாப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.
ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்துக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்குப் பின் மாற்று பயிர் சாகுபடி செய்ய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் விவசாயிகள் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.